ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வு – ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பு!

முஸ்லிம் மக்களின் ரமழான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று புதன்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.

இஸ்லாமிய மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி, வருகை தந்திருந்த அதிதிகளுடன் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் விசேட உரையாற்றினார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் ஆகியோருடன் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலி பல்தசார், உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளும் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.