விசேட சுற்றிவளைப்பு: 296 பேர் அதிரடி கைது! – 1,400 பேருக்கு எதிராக வழக்கு.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபரின் விசேட அறிவுறுத்தலின்படி, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி, அனைத்து பொலிஸ் பிரிவுகளும் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.

இதன்போது மொத்தம் 22 ஆயிரத்து 195 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 7 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 43 பேர் நேரடி பிடியாணை உத்தரவுக்கும், 26 பேர் திறந்த பிடியாணை உத்தரவுக்கும் உட்பட்டவர்களாவர்.

இதேவேளை, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மதுபோதையில் வாகனம் செலுத்திய 104 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 1,451 பேருக்கு எதிராகத் தண்டப்பணம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.