வடக்கு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த ஆளுநர் உத்தரவு! – விலை மீளாய்வு செய்ய தீர்மானம்.

தற்போதைய நிலைமைகளில் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) ஊடாக உடனடியாக மேற்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், ‘டித்வா’ இயற்கைப் பேரிடரால் பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளின் மீள்கட்டுமானப் பணிகளைத் துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிர்வாகச் செலவினங்கள் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பிலும் ஆளுநரால் அதிகாரிகளுக்கு விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.