பணிக்குச் சென்ற செவிலியரை காவு கொண்ட கோர விபத்து! – ஒரு வயதுக் குழந்தையும் மனைவியும் அநாதரவு.

சிலாபம் பொது வைத்தியசாலையின் 12ஆம் இலக்க வார்டில் பணியாற்றிய, அனைவராலும் ‘பொடி மாஸ்டர்’ என அன்போடு அழைக்கப்படும் இளம் செவிலியர் ஹசித மலவிசிங்க பஸ் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஹெட்டிபொல – படுவஸ்நுவர வீதியின் கொட்டன்பிட்டிய சந்தியில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது:-

நிகவெரட்டிய பணிமனைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற லொறி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியுள்ளது. பின்னர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரக் கடையொன்றுக்குள் பஸ் புகுந்தது. அந்த நேரத்தில், சிலாபம் பொது வைத்தியசாலையின் பணிக்குச் செல்வதற்காக அந்தக் கடையின் அருகில் பஸ்ஸுக்காகக் காத்திருந்த ஹசித மலவிசிங்க என்பவர் இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கடையின் உரிமையாளர் பஸ் கட்டுப்பாடின்றி சீறி வருவதைக் கண்டு தப்பித்த போதிலும், ஹசிதவுக்கு அதனை அவதானிக்க முடியாதமையாக் இந்த விபரீதம் நேர்ந்துள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குருநாகல் செவிலியர் கல்லூரியின் 2017 – ஏ அணியைச் சேர்ந்த ஹசித மலவிசிங்க, ஒரு சிறந்த சுகாதாரப் பணியாளராகவும், நோயாளிகளிடம் மிகுந்த அன்பு காட்டும் ஒருவராகவும் திகழ்ந்தார். இதன் காரணமாகவே சக ஊழியர்கள் அவரை ‘பொடி மாஸ்டர்’ எனச் செல்லமாக அழைத்து வந்தனர்.

இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். அவருக்கு இரண்டு வயதுடைய மகன் ஒருவன் உள்ளான்.

தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மிக விரைவில் வெளிநாடு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்திருந்தார்.

விபத்துத் தொடர்பாக நிகவெரட்டிய டிப்போ பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாரதியின் கவனக்குறைவா அல்லது பஸ்ஸின் இயந்திரக் கோளாறா என்பது குறித்து ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தனது கடமைக்குச் செல்லும் வழியில் ஒரு இளம் உயிரை காவு கொண்ட இந்தச் சம்பவம் சிலாபம் மற்றும் ஹெட்டிபொல பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.