ராஜபக்க்ஷ அணி மீண்டும் ஆட்சியில் அமரக் கனவு காணவே வேண்டாம்! மக்கள் பணத்தைச் சூறையாடியவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

“ஊழல் மற்றும் மோசடிகளில் சிக்கிய ராஜபக்ஷ அணியினர் மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்று கனவிலும் நினைக்கக்கூடாது” என்று தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

“இந்த நாட்டின் மக்கள் கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகவே எமக்கு மிகப்பெரிய ஆணையை வழங்கியுள்ளனர். நாட்டைச் சீரழித்தவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற இடமளிக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ அணியினர் மீள் எழுச்சி பெறப்போவதாகக் கூறி வருவதை விமர்சித்த அவர், “ஊழல், மோசடி விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான கருத்துக்களை அவர்கள் பரப்பி வருகின்றனர். ஆனால், சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. கடந்த காலங்களில் மக்கள் பணத்தைச் சூறையாடியவர்கள் அதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசு ஊழலற்ற, சுத்தமான அரசியல் கலாசாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தி வருகின்றது என்றும், பழைய ஊழல்வாதிகளை மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ள சூழலில், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.