விசாரணைகளைக் கண்டு நாம் அஞ்சவே மாட்டோம்! – எப்போது அழைத்தாலும் வரத் தயார் என்றும் நாமல் ராஜபக்க்ஷ எம்.பி. அதிரடி.

“விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது நிரபராதித்தன்மையை நிரூபிப்பதற்கான சிறந்த வழிமுறை. எனவே, எந்த நேரத்திலும் விசாரணைக்குச் சமூகமளிக்க நாம் தயாராகவே இருக்கின்றோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசாரணை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசு அச்சுறுத்தல் விடுத்தோ அல்லது அழுத்தங்களைப் பிரயோகித்தோ தம்மை முடக்க முடியாது என்று தெரிவித்த நாமல், இந்த விசாரணைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார். பலவந்தமாக வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் நீதிக்குப் புறம்பானவை என்றும் அவர் சாடினார்.

தற்போதைய அரசு நாட்டில் நடக்கும் பாரிய மோசடிகளை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

“நிதி அமைச்சில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் 80 கோடி ரூபா மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மரணத்தை உடனடியாக ‘தற்கொலை’ எனக் கூறி அரசு மூடிமறைக்கப் பார்க்கின்றது. இவ்வாறான முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எம் மீதான விசாரணைகளை அரசு கையில் எடுத்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாங்கள் எதற்கும் பயந்து விசாரணைகளைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த நாமல், தற்போதைய அரசு மக்கள் பிரச்சினைகளில் இருந்து நழுவிச் செல்லவே முயற்சிக்கின்றது எனவும், இத்தகைய போக்கினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.