பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற மதுபானக் கடத்தல்காரர் மீது துப்பாக்கிச்சூடு! – அம்பாறையில் நேற்று இரவு பரபரப்பு.

அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது, பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது.

நேற்று இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் விசேட சோதனையை மேற்கொண்டனர். இதன்போது, சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர், உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். இதையடுத்து பொலிஸார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி அவர் தப்பியோடியுள்ளார்.

தப்பியோடியவரைப் பிடிக்க நடமாடும் கண்காணிப்பு பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயற்சித்துள்ளனர். அப்போது மீண்டும் பொலிஸாருடன் மல்லுக்கட்டிய சந்தேகநபர், உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார். இந்த மோதலின் போது ஏற்பட்ட பதற்றமான சூழலில், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயமடைந்தார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் பலத்த காயங்களுடன் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, சந்தேகநபரின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.