கேரளா: ஷிகெல்லா பாக்டீரியா தொற்றுக்கு 4 வயது சிறுமி பலி – 164 பேருக்கு அறிகுறி!

கோழிக்கோடு,

கேரளம் மாநிலத்தில் ஷிகெல்லா நோய் பரவி வருகிறது. இது ஷிகெல்லா என்ற பாக்டீரியாவால் குடலில் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் அசுத்தமான உணவு, தண்ணீர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பு மூலம் வேகமாக பரவுகிறது. இந்த நோய் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், வயிறு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஷிகெல்லா நோய்
கோழிக்கோடு மாவட்டம் தளக்களத்தூர் பகுதியை சேர்ந்தவள் நிலா (வயது 4). இவள் கடந்த 2-ந் தேதி வாந்தி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், உடல்நிலை சரியாகாததால் சிறுமியிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவில் ஷிகெல்லா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நிலா இறந்தாள்.

164 பேருக்கு அறிகுறிகள்
மேலும் கோழிக்கோடு அருகே பன்னீரங்காவு பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, புரமேரி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் ஆகிய 2 பேர் ஷிகெல்லா நோய் பாதித்து கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அவர்கள் குணமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கேரளம் மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.முரளிதரன் கூறும்போது, கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து சிறுமி உயிரிழந்தாள். வயநாடு மாவட்டத்தில் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 164 பேருக்கு ஷிகெல்லா நோய் அறிகுறிகள் காணப்படுகிறது. அவர்களை ஷிகெல்லா நோய் பாதித்து உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.