காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாடு முழுவதும் 22 ஆயிரம் முறைப்பாடுகள்! – வடக்கு, கிழக்கில் மாத்திரம் 6 ஆயிரத்துக்கும் அதிகம் என்று ஓ.எம்.பி. தலைவர் மகேஷ் கட்டுலந்த யாழில் தெரிவிப்புக்ஷ

https://we.tl/t-6gv8FZke6yDWpNgJ

இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய 22 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்றும், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலிகளைப் போக்கும் நோக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எடுத்துவரும் தார்மீக நடவடிக்கைகள் குறித்து அதன் தலைவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இல்லாத ஒரு முற்றிலும் சுதந்திரமான அரசு நிறுவனமாகவே இயங்கி வருகின்றது. நாங்கள் அரசினுடைய நிதியில் இயங்குகின்ற போதிலும், அரச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நீதியான வழியில் மாத்திரமே எமது பணிகளை முன்னெடுக்கின்றோம்.

நாங்கள் பல வருடங்களாகத் தீராத வலிகளைச் சுமந்து கொண்டிருக்கும் எமது மக்களுடன் நேர்மையாக இணைந்து, அவர்களுக்கான உண்மையான சேவையை சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப மேற்கொண்டு வருகின்றோம்.

வலிகளைச் சுமந்து கொண்டிருக்கும் மக்களுக்கே தங்களுடைய வலிகளுக்கான நிவாரணத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது மற்றும் உண்மையை எவ்வாறு கண்டறிவது என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.

நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகப் பிரதிநிதிகள் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் நேரடியாகக் கூடியிருப்பது, பாதிக்கப்பட்ட தரப்பினருடன் திறந்த மனதுடன் கலந்துரையாடலை மேற்கொள்வதற்காகவே ஆகும்.

அதனூடாக எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நீண்டகால வலிகளைப் போக்குவது மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார, சட்டபூர்வ நிவாரணங்களை எவ்வாறு துரிதமாகப் பெற்றுக்கொடுப்பது போன்ற காத்திரமான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த உயர்மட்டக் குழுவின் பிரதான இலக்காகும்.” – என்றும் மகேஷ் கட்டுலந்த சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.