வடக்குக்கான நாகராந்திர கடுகதி ரயில் புதன் தவிர்ந்த அனைத்து நாள்களிலும்! – புதிய ஒழுங்கு உடனடியாக நடைமுறைக்கு…
கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி ரயில் சேவையை வாரத்தில் நான்கு நாள்களாகக் குறைப்பதற்குத் தீர்மானித்த ரயில்வே நிர்வாகம், அது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களை அடுத்து அந்தச் சேவையை வாரத்தில் ஆறு நாள்களுக்கு நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றது.
இப்போதைய நிலையில் புதன்கிழமை மட்டுமே வடக்குக்கான நாகராந்திர கடுகதி ரயில் சேவை நடைபெற மாட்டாது.
பழுதடைந்திருக்கும் ரயில் இயந்திரம் ஒன்றை விரைந்து திருத்துவதன் மூலம் வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் புதன்கிழமைகளிலும் வழமை போல இந்தச் சேவையை நடத்துவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
ரயில்வே நிர்வாகத்தின் முன்னைய அறிவிப்பில் இந்த வாரம் முதல் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களும் இந்த நாகராந்திர சேவை நடைபெற மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமையை அடுத்து இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்திய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கா இந்தச் சேவையை இயன்றளவு வழமை போல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனத் தெரிகின்றது.
இதனையடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்தச் சேவையை புதன்கிழமை தவிர்ந்த ஆறு நாள்களும் நடத்துவதற்கு இப்போது தீர்மானிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதத்தில் நல்லூர் உற்சவகாலம் வருவதையொட்டி புதன்கிழமை சேவையையும் வரும் 20 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு முழு அளவில் முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
காலையில் கல்கிஸையில் இருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை வழியாக யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்குச் செல்லும் இந்த நாகராந்திர கடுகதி சேவை மதியம் காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு முன்னிரவில் கல்கிஸையைத் திரும்பிச் சென்றடையும்.
இதுவரை காலமும் தினசரி நடைபெற்ற இந்தச் சேவை இப்போதைய புதிய ஒழுங்கின்படி புதன்கிழமை மாத்திரம் நடைபெறாது. புதன்கிழமை சேவையும் விரைவில் மீள நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என நம்பப்படுகின்றது.
