இளம் பிக்கு நீரில் மூழ்கி பரிதாபப் பலி!

மொனராகலை மாவட்டம், வெல்லவாய – தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பௌத்த பிக்குகள் சிலர், கிரிந்தி ஓயாவுக்கு நேற்று நீராடச் சென்றுள்ளனர். இவ்வாறு நீராடிக்கொண்டிருந்த போதே மேற்படி பிக்கு எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.

உடனடியாகப் பிரதேச மக்கள் அவரை மீட்டுத் தணமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 18 வயதுடைய பிக்குவே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் ஊவா குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.