ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுடன் விசேட பேச்சு.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச்சுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அரசின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதற்கான அரசின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி தெளிவுபடுத்தினார்.

அந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசுக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் மார்க் அன்ட்ரூ இதன்போது குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பங்குதாரர் மற்றும் அபிவிருத்தி நிதியியல் நிபுணர் அஸாம் பாக்கீர் மாகர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமான மற்றும் தாங்கும் திறன் தொடர்பான அதிகாரி வகீஷா பெரேரா ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.