பொன்சேகாவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகின்றார் மனோ!

“சரத் பொன்சேகாவுக்கு இரண்டொரு தினங்களில் உரிய பதிலை வழங்குவேன்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

‘மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கிடையாது. விடுதலைப்புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது’ என்று சரத் பொன்சேகா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் தனது முகநூலில் இன்று பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சரத் பொன்சேகா எம்.பி., என்னைப் பற்றி நேற்று சபையில் நானில்லாத வேளையில், பேசியுள்ளார் என்பது என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மரக்கொத்தி, மரம் மரமாக கொத்தி விட்டு, கடைசியில் வாழை மரத்துக்குக் குத்தி மாட்டிக்கொள்ளுமாம். அதுபோல், இவர் என்னிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

நான் அரசியல் பொடியன் அல்லன். அவரைவிட சீனியர் என்ற அடிப்படையில், அவருக்கு உரிய பதிலை, “சிங்கள பெளத்த வாக்குகள் எமக்குத் தேவை. ஆனால், அது தமிழ், முஸ்லிம் வாக்குகளை இழந்து, இனவாதம் பேசி பெற முடியாது” எனச் சிங்கள மொழியில், அவருக்குப் புரியும் முகமாக இரண்டொரு தினங்களில், நான் பகிரங்கமாகத் தருவேன்.

இது பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் இன்று விளக்கிக் கூறியுள்ளேன். பொறுத்திருங்கள்…!” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.