‘தர்பார்’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ”அண்ணாத்த”. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. “அண்ணாத்த” என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி அண்ணன் – தங்கை சென்டிமெண்ட் செம்ம எவியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில்,  உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டாம் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐனவரி மாதம் முதல் தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் கையில் இருக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதனால் அடுத்த வாரம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்த்து நயன்தாராவும், கீர்த்தி சுரேஷும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு தற்போது அதை 2021 கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.