ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: ஆறாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் இருக்கும்போது இறந்ததைக் கண்டித்து திங்கள் கிழமை ஆறாவது நாளாக நடக்கும் போராட்டத்தால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் பற்றி எரிகின்றன.

40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது.

நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஃபிலடெல்ஃபியா போன்ற இடங்களில் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் பெப்பர் குண்டுகள் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பல நகரங்களில் போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் சூறையாடப்பட்டன.

ஞாயிற்று கிழமையன்று, பாதுகாப்பு படையினர் 5000 பேர் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த 15 மகாணங்களிலும் வாஷிங்டன் டிசி யிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் போராட்டக்கார்கள் மீண்டும் குவிந்து, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜனாதிபதிகள் தேவாலயம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தீவைத்தனர். கலவரத் தடுப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசினர். பதிலுக்கு போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.

Comments are closed.