வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தூக்கி வீசியிருக்கிறார்கள் : கருணா

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தலையிடத் தேவையில்லை வடக்கு கிழக்கு பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம் நீங்கள் இங்கு வர வேண்டிய அவசியமில்லை. கல்முனை மக்கள் அடித்து துரத்தியதை மறந்து விட்டார் போல. இனிமேல் வந்தால் மக்கள் துரத்தி அடிப்பார்கள் என தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றில் தான் தெரிவித்த தேர்தல் பிரசார கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்கிய பின்னர் மீண்டும் தனது பிரசார பணியினை முன்னெடுப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சனிக்கிழமை (27) அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

அம்பாறை மாவட்டத்தில் பாரிய சவால் எனக்கு இருக்கின்றது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. நான் வெற்றி அடைந்தவுடன் அரசுடன் கதைத்து அமைச்சுக்கள் ஊடாகவும் அந்த வளங்களை பெற்றுக்கொண்டு மக்களுக்கு வழங்குவேன் என இவ்விடத்தில் கூறுகின்றேன்.வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை தூக்கி வீசியிருக்கிறார்கள் இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச் சமூகம் குழிதோண்டிப் புதைக்கப்படுவார்கள் என்று கூறிக்கொள்கிறேன்.

வட மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பல அரசியல் தலைவர்கள் போட்டியிடுகிறார்கள். அது நல்ல விடயம். எனக்கு பிரச்சினை வந்த போதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவமோகன் போன்றோர் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.அம்பாறை மாவட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வர்த்தகர்கள், மதுபானசாலை உரிமையாளர்கள் ,மரம் வெட்டி விற்பவர்கள், மண் கொள்ளைக்காரர்களை பாராளுமன்ற அனுப்பினால் என்ன நடக்கும் என்பதனை சிந்தித்துப்பாருங்கள் இதனை விளங்கிக் கொண்டு எதிர்வரும் தேர்தலில் சிந்தித்து வடக்கு கிழக்கிலேயே சிறந்த தலைவர்களை தெரிந்தெடுக்க வேண்டும்.

அண்மையில் எனக்கு ஏற்பட்ட பிரச்சனையின் போது கவிந்திரன் கோடிஸ்வரன் என்பவர் கூடுதலாக கதைத்தார் .என்னை கைது செய்ய வேண்டும் என்றார். இதற்கு காரணம் யாதெனில் அவரது வர்த்தகம் முழுவதும் முஸ்லிம்களுடன் தான் இடம்பெறுகிறது. மரத்தை வெட்டிக் கொண்டு அக்கரைப்பற்றில் முஸ்லிம்களுக்கு கொடுப்பார். மண்ணைத் தோண்டிக் கொண்டு அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லிம்களுக்கு விற்பனை செய்வார். எனவே இவர்களை போன்றவர்கள் இவ்வாறு தான் வர்த்தக ரீதியாக செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்யப் போகின்றனர் மக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

என்னை பொறுத்த அளவில் நான் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை.தமிழரை எப்போதும் கைவிட போவதுமில்லை. ஒரு சில அரசியல்வாதிகளின் அராஜக செயல்களை எடுத்து கூறியிருக்கின்றோம். அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் என்பவர் தனக்கு கருணா அம்மானினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார் .நிந்தவூரில் ஒரு சம்பவம் நடந்தது அதை நான் வெளியிடுவேன். அதனுடன் அவர் சம்பந்தப்பட்டுள்ளார். பொலீஸ் விசாரணையின் பின்னர் அது சரியாக நடக்கும். என தெரிவித்தார். ஆனால் இதில் என்ன வேடிக்கை எனின் சிலவேளை குறித்த ஊருக்குள் நள்ளிரவில் பதுங்கி சென்றாரோ எனக்கு தெரியாது. யாரும் அடித்துத் துரத்தினார்களா என்பதனை நாங்கள் ஆராய வேண்டும். ஆகவே அங்கு ஒரு சம்பவம் நடந்ததாக அறியவில்லை. இதுபோன்ற தூக்க கலக்கத்தில் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் இவ்வாறானவர்கள் இங்கு செயற்பட்டது போன்று தங்களால் எழுந்த மாத்திரத்தில் செயற்பட முடியாது என்பதனை தற்போது அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் அதாவுல்லாவும் கடுமையாக அரசியல் கருத்துக்களை கூறிக்கொண்டு இருக்கின்றார். அவர் மிகப்பெரிய அரசியல் ஞானி போன்று அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தனக்கு பின்னால் பைல்களை தூக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அவர் போதையில் உளறினாரோ தெரியவில்லை. அவர் நன்றாகத்தான் இருந்தவர். தற்போது அவர் உட்பட எல்லா அரசியல்வாதிகளும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடைசி கருத்து தேசியம் தீர்வுத்திட்டம் என்று சம்பந்தன் ஐயா கண்ணை மூடிக்கொண்டு இருந்து கூறி திரிவார். இது தான் வழமையாக நடந்து வருகின்றது.இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் தற்போது உணர்ந்து கொள்ளவேண்டும். இவ்வாறானவர்களால் எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை .கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாய்ப்பு ஒரு போதும் இனி கிடைக்காது. ஏனெனில் ரணில் தலைமையிலான அரசாங்கத்தை காப்பாற்றி வைத்த பெருமைக்குரியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்தான். இவர்கள் அரசினை வைத்துக் கொண்டு அதில் அபிவிருத்திகளை மேற்கொண்டு இருக்கலாம் ஆனால் அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் ஏன் ஒன்றுமே செய்யாத இவர்களுக்கு நாம் இனி வரும் காலங்களில் வாக்களிக்க வேண்டும் என்று.

என்னை விமர்சித்தவர்கள் உதாரணமாக மனோகணேசன் , செல்வம் அடைக்கலநாதன் , சம்பந்தன் ஐயா போன்றோர் அனைவருமே விடுதலைப்புலிகளின் பொங்குதமிழ் நிகழ்ச்சியில் சென்று வழங்கப்பட்ட அடையாள சின்னத்தை நெஞ்சில் பொருத்துக்கொண்டு தனி நாடு தான் ஒரே தீர்வு விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கின்றோம் என்று பேசிய பேச்சு என்னிடம் இருக்கின்றது. இதனை நான் உடனடியாக வெளியிட்டால் அவர்களை கைது செய்ய வேண்டி வரும். இதனை அறிந்து கொண்டு தான் அவர்கள் இனி வரும் காலங்களில் பேச வேண்டும்.

மேலும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தலையிடத் தேவையில்லை. வடக்கு கிழக்கு பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் இங்கு வர வேண்டிய அவசியமில்லை. கல்முனை மக்கள் அடித்து துரத்தியதை அதை மறந்து விட்டார் போல் இருக்கிறது. இனிமேல் வந்தால் மக்கள் துரத்தி அடிப்பார்கள். புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

Comments are closed.