இந்தியாவுடன் பேசாமல் மாகாண சபைகள் முறைமை தொடர்பில் முடிவெடுக்காதீர்கள்!

இந்தியாவுடன் பேசாமல் மாகாண சபைகள் முறைமை தொடர்பில் முடிவெடுக்காதீர்கள்!

அரசுக்கு மைத்திரி அணி எச்சரிக்கை

“இலங்கையில் மாகாண சபைகள் முறைமை குறித்து எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், இந்தியாவுடன் அரசு கலந்துரையாட வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைகள் முறைமை தொடர்பில் இலங்கை தனியாக எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. மாகாண சபைகள் முறைமையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடப்பட வேண்டும்.

இந்தியாவுடன் கலந்துரையாடாமல் தீர்மானத்துக்கு வருவது பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சாத்தியமானதாக அமையும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.