இந்தியாவில் பெரியளவில் கொரணா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பம்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் திட்டம் இன்று இந்தியாவில் ஆரம்பித்தது.

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (16) துவக்கி வைத்ததையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் (Covishield and Covaxin) ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9-ந் தேதி உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார். அதன் பின், ஜனவரி 16-ந் தேதி (இன்று) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

முதல்கட்டமாக, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தடுப்பூசி போடும் அறை (ஜெய்ப்பூர் மருத்துவமனை)
அதன்படி, உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா இன்று தொடங்கியது. இந்த மாபெரும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தமிழகம்
தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை, முதல்வர் பழனிசாமி மதுரையில் துவக்கி வைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல் தடுப்பூசியை, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் வைத்தியர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 166 முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில், முதல் நபராக அப்பல்லோ மருத்துவமனையின் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி போட்டுக்கொண்டார்.

தமிழகத்திற்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்டு, 20ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ள்ளது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.