கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்கின்றது எதிரணி பிரதமர் மஹிந்த குற்றச்சாட்டு.

கொரோனா வைரஸை வைத்து
அரசியல் செய்கின்றது எதிரணி
பிரதமர் மஹிந்த குற்றச்சாட்டு.

“எதிர்க்கட்சியின் சிலர் கொரோனாப் பிரச்சினையில் தொங்கிக் கொண்டு அதிலேனும் மீளெழுவதற்கு முயற்சித்து வருகின்றனர். நண்பர்களே, எங்களுக்கு வைரஸின் மூலம் அரசியல் செய்வதற்கான தேவையில்லை. நாட்டு மக்களின் நலன் குறித்து செயற்படுவதே எமது தேவையாக உள்ளது.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் நிறுவப்பட்ட யோ பிரேண்ட் பாதணி தொழிற்சாலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியவை வருமாறு:-

“எமது நாட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையர்களான நம் அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைவரும் காண்பது ஒரே கனவு. அது நம் நாடு அபிவிருத்தியடைந்த நாடாகும் கனவாகும்.

நாம் உலகின் மத்தியில் பிற நாடுகளைவிட மானுட குணாதிசயங்களினால் சிறந்த தேசமாகும். வரலாற்றில் எமது நாடு பல்வேறு துறைகளில் மதிப்பு வாய்ந்ததாக விளங்குகின்றது.அண்மைக் காலத்தில் வெவ்வேறு அரசின் கீழ் நாட்டின் குறிக்கோள் மாற்றமடைந்தது. எனினும், நாட்டு மக்களதும், நாட்டினதும் குறிக்கோள் தொடர்பில் நாம் எப்போதும் பொறுப்புடன் பணியாற்றினோம்.

இன்று கொரோனா நெருக்கடி முழு உலகையும் ஆட்கொண்டுள்ளது. பிற நாடுகளில் போன்றே நமது நாட்டிலும் அது மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது. வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்புத்துறை, அரச ஊழியர்கள் போன்றே, தனியார் துறையைச் சேர்ந்த நீங்களும், நாட்டின் அனைத்துப் பொதுமக்களும் முறையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி இந்தச் சவாலை வெற்றிக்கொள்ளப் பாடுபடுகின்றனர். அரசு என்ற ரீதியில் நாம் அதற்குத் தேவையான தலையீட்டைச் செய்துள்ளோம்.

எதிர்க்கட்சியின் சிலர் கொரோனா பிரச்சினையில் தொங்கிக் கொண்டு அதிலேனும் மீளெழுவதற்கு முயற்சித்து வருகின்றனர். நண்பர்களே, எங்களுக்கு வைரஸின் மூலம் அரசியல் செய்வதற்கான தேவையில்லை. நாட்டு மக்களின் நலன் குறித்து செயற்படுவதே எமது தேவையாக உள்ளது.

நாட்டில் ஏதேனும் ஒரு சவால் மிகுந்த சூழல் நிலவும் சந்தர்ப்பங்களிலேயே பொதுமக்கள் எமக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அது பொதுமக்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கையே ஆகும். நாட்டின் பாதுகாப்பாக இருப்பினும், தொற்று நெருக்கடியாக இருக்கட்டும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசு என்ற ரீதியில் நாம் நமது கடமையை நிறைவேற்றுவோம். அதேபோன்று நாம் அந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றியுள்ளோம்.

பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தேனும் உள்ளூர் தொழில்முனைவோரை முன்னேற்றுவதற்கு நமக்கு முடிந்துள்ளது.

இன்று ஆரம்பிக்கப்படும் இந்தப் பாதணி தொழிற்சாலை முழு நாட்டுக்குமான சொத்தாகும். உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பாடசாலை பாதணிகளை விட 30 சதவீம் குறைவாக இந்தத் தொழிற்சாலையின் பாதணிகள் விற்பனை செய்யப்படும். அதேபோன்று விளையாட்டு மற்றும் நடைப்பயிற்சியின்போது அணியும் பாதணிகள் சர்வதேச தரத்துக்கு ஏற்ப உயர்தரத்தில் தயாரிக்கப்படும் என அறியக் கிடைத்துள்ளது.

இந்த அனைத்துப் பாதணிகளும் Made In Sri Lanka என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படும். சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின்படி, உள்ளூர் பொருளாதாரக் கொள்கைக்குள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதே எங்கள் குறிக்கோள்.

இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், எங்கள் உள்ளூர் விவசாயிகளையும் தொழில் அதிபர்களையும் முன்னேற்ற விவேகமான முடிவை எடுத்தோம். மஞ்சள் மட்டுமல்ல, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தினோம். இப்போது நம் நாட்டின் விவசாயிகள் தானாகவே பயனடைகின்றனர். மறுபுறம், நம் நாட்டில் உயர்தரத் தயாரிப்புகளை நுகரும் வாய்ப்பும் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

இந்தத் தொழிற்சாலைகள் இன்று முதல் பாதணிகளை உருவாக்கத் தொடங்கும்போது, இறப்பர் செய்கையாளர்களும் பொருளாதார ரீதியாகப் பயனடைவார்கள். அவர்களின் குடும்பங்களின் வருமானம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இதுபோன்ற ஒரு தொழிற்சாலையில் தொழில்நுட்ப அறிவைப் பெற சில நேரங்களில் நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். நம் இளைஞர்கள் இப்போது இவ்வாறு அந்த அறிவைப் பெற முடியும். இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும்போது, மதிப்பு மிகுந்த உற்பத்தியின் பொருளாதார நன்மைகள் ஒட்டுமொத்தமாக நாட்டுக்குக் கிடைக்கும்.

இது தெற்காசியாவில் இரண்டாவது பெரிய காலுரை ஏற்றுமதி உற்பத்தி நிறுவனமும் உங்களுக்குச் சொந்தமான இவ்வகையிலேயே பாரிய சேவையை வழங்கும் நிறுவனமாகும்.எனவே, ஒரு குண்டூசியேனும் தயாரிக்காத ஒரு நாடு என்று நம்மைக் நம்மை நாதே குறைக் கூறிக்கொள்வதில் பயனில்லை. நாம் கடந்த காலத்திலிருந்து நல்லதைப் பெற்று எதிர்காலத்துக்காக இன்று செயற்படுத்த வேண்டும். ஒரு வளமான நாட்டை நோக்கிய பயணத்துக்கு அத்தகைய ஒரு தொழிற்சாலையின் சக்தி மகத்தானது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.