இந்தியாவின் குடியரசு தினம் இன்றாகும்.மூவர்ணங்களால் ஜொலிக்கும் விமான நிலையம்.

நாடு முழுவதும் இன்று இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி சென்னை விமான நிலையம் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது.

இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26-ந் தேதி, குடியரசு தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடியரசு தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசு சார்பில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றுகிறார்.

இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேசிய கொடி படர்ந்து இருப்பதுபோல் விமான நிலையம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விமான நிலையம் பயணிகள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்து இழுக்கும் காட்சியாக உள்ளது. விமான நிலையம் மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.