த்ரிஷியம் 3 ம் பாகமும் மலையாளத்தில் தயாராகிறது

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷியம் 2013 ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் பிறகு இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் த்ரிஷியம் படத்தின் இரண்டாம் பாகமும் தயார் செய்யப்பட்டு பிப்ரவரி 19 ம் தேதி ஓடிடி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இதுவும் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்தே அதே த்ரில், கதையில் விறுவிறுப்பு இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் த்ரிஷியம் ரசிகர்களை குஷிப்படுத்த மேலும் ஒரு உற்சாகமான தகவலை தயாரிப்பாளர் ஆன்டனி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், த்ரிஷியம் 3 ம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தையும் ஜீத்து ஜோசபே இயக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், த்ரிஷியம் மூன்றாம் பாகத்தை இயக்கும் எண்ணம் ஜீத்துவின் மனதில் இருந்தது. இதனை புரிந்து கொண்டு நானும் அவரிடம் பேசினேன். இது நிச்சயம் உறுதியாகும் என நம்புகிறேன்.

மோகன்லாலும், ஜீத்துவும் கூட இது பற்றி பேசினார்கள் என நினைக்கிறேன். எங்கள் அனைவரின் விருப்பமும் த்ரிஷியம் 3 உருவாக வேண்டும் என்பதே என்றார். த்ரிஷியம் 2 வில் ஆன்டனி பெரும்பவூரும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார்.

த்ரிஷியம் 2 வை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட முடியாதது பற்றி வேதனை தெரிவித்துள்ள ஆன்டனி, பிரியதர்ஷன் இயக்கத்தில் தான் தயாரிக்கும், மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹாம் படத்தை தியேட்டரில் வெளியிட முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

த்ரிஷியம் படத்தின் 2 ம் பாகம் பல மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளதையும் ஆன்டனி உறுதி செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.