வடக்கில் மேலும் 4 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

வடக்கில் மேலும் 4 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 423 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 5 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் நால்வர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வலைப்பாடு கிராமத்தில் மேலும் இரண்டு பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

மன்னார் நகரைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உள்ளமையும் இன்றைய பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் ஏற்கனவே, தொற்று உள்ளவர்களுடன் நேரத் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 329 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.