வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கப் பிரயத்தனம்! அரசின் போக்கைக் கண்டித்தார் கஜேந்திரன்.

“வடக்கில் இன விகிதாசாரத்தையும், இனப்பரம்பலையும் மாற்றியமைக்கும் விதமாக பெரும்பான்மையினத்தவர்களுக்குக் காணிகள் வழங்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுங்கக்கட்டளை சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பளைப் பகுதியில் உள்ள காணி சீர்திருத்தக் குழுவின் காணிகள் அந்தப் பிரதேசத்தையோ அல்லது வடக்கைச் சாராதவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வெளி மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பொலிஸாருக்கு 5 ஏக்கர்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் காணிகள் இல்லாமல் இருக்கின்றபோது இவ்வாறு அந்தப் பிரதேசத்தின், மாகாணத்தின் இன விகிதாசாரத்தை, இனப்பரம்பலை, மாற்றியமைக்கும் விதமாக இந்தக் காணிகள் பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

குறித்த பிரதேச செயலாளருக்கும், அங்குள்ள அதிகாரிகளுக்கும் தெரியாமல் அநுராதபுரத்திலிருந்து வந்த முடிவுகளின் அடிப்படையிலேயே வடக்கின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு முறைகேடான முறையில் வழங்கப்பட்ட காணிகள் மீண்டும் திரும்பப் பெறப்பட வேண்டும்”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.