அடிப்படைவாதத்தைப் போதிக்கும் இஸ்லாமிய போதகர்களை உடன் நாடு கடத்தவேண்டும் அரசிடம் கத்தோலிக்கச் சபை வலியுறுத்து.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அடிப்படைவாத முஸ்லிம் குழுக்களை முற்றாகத் தடை செய்வதுடன், அவர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு அனுசரணையாளர்கள் மற்றும் அடிப்படைவாத போதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை இலங்கையில் இருந்து உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசீமுடன் வடக்கு, கிழக்கில் பல்வேறு வழிகளிலும் கொடுக்கல் – வாங்கல்களைப் பேணிய சகல நபர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பாகவும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபையின் 13 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஈஸ்டர் தாக்குதல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் மாத்திரமன்றி முழு இலங்கையருக்குமான தாக்குதலே. ஆனால், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

இதனால் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அரசு மற்றும் எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின், ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்ட மற்றும் சம்பவத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அனைவர் மீதான விசாரணைகளையும் துரிதப்படுத்தவும், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவும் வேண்டும்.

அத்துடன், சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணிய அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அடிப்படைவாத முஸ்லிம் குழுக்களை முற்றாகத் தடை செய்யவும், அவர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு அனுசரணையாளர்கள் மற்றும் அடிப்படைவாத போதனையாளர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.