பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதினாலேயே பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டது.

உப உணவு உற்பத்திக்கு அவசியமான தரப்படுத்தப்பட்ட வகையை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்தமைக்கான காரணம் இறக்குமதி செய்யப்படும் பாம் எண்ணெய் பாவனை பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதனாலாகும். பாம் எண்ணெய் பயன்பாட்டின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் பெரும்பாலும் பிரதானமான பல நோய்களை உருவாக்குவதாக வைத்தியர்கள், உணவு தொடர்பான விசேட நிபுணர்கள் மூலம் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

ஆனாலும் உரிய தரப்படுத்தப்பட்ட பாம் எண்ணெய் வகையைக் கொண்டு பிஸ்கட், உணவு பண்டங்கள், ஒரு சில பான் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

1511.90.10 எனும் குறியீட்டைக் கொண்ட வகை (Harmonized System code) அவ்வாறானதாகும். அது புலக்கத்தில் பாம் ஸ்டியரின் என்று (Palm Stearin) குறிப்பிடப்படும். குறித்த உப உணவு உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக இவ்வகையை இறக்குமதி செய்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், முன்னர் பாரிய விமர்சனங்களுக்குள்ளான எத்தனோல் இறக்குமதியை முழுமையாக நிறுத்தியது. மருத்துவ தேவைகளுக்காக எத்தனோல் இறக்குமதிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பாம் ஸ்டியரின் இறக்குமதிக்கும் இவ்வாறே அனுமதி வழங்கப்படுகின்றது.

முள்தேங்காய் பயிர்ச்செய்கை, நீரூற்றுக்கள் வத்திப்போதல் மற்றும் மண் வளமற்று போதல் போன்ற நீண்டகால பாதிப்பை சுற்றாடலுக்கு ஏற்படுத்தக்கூடியது என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் முள்தேங்காய் பயிர்ச்செய்கையை படிப்படியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்திருந்தார். தற்போதுள்ள முள்தேங்காய் பயிர்களை தடவைக்கு 10 வீதம் எனும் வகையில் கட்டம் கட்டமாக அகற்றி அந்நிலங்களில் இறப்பர் அல்லது சுற்றாடலை பாதிக்காத ஏனைய பயிரினங்களை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave A Reply

Your email address will not be published.