யாழ். மாநகர காவல் படை விடயம்: பாதுகாப்புச் சபையில் ஆராய்வு! முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.

தேசிய பாதுகாப்புச் சபை நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று அவசரமாகக் கூடியது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகரைத் தூய்மைப்படுத்தும் வகையில் மாநகர சபையால் நியமிக்கப்பட்டுள்ள காவல் படை தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்தும் விசேடமாக ஆராயப்பட்டது.

இதன்போது தேசிய பாதுகாப்புக் கருதி சில முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும், அவை விரைவில் வெளியாகும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையால் மாநகரின் சுகாதார நடைமுறைகளைக் கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணித்தல் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட காவல் படையின் சீரூடை விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைப் பகுதிகளுக்குள் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையைப் போன்ற வர்ணத்தால் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி சீருடைகள் தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர், பிரதம வருமான வரிப் பரிசோதகர் மற்றும் குறித்த காவல் படையில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மாநகர சபை ஊழியர்கள் ஐவர் உட்பட்ட 7 பேரிடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர் விசாரணை நடைபெற்றது. யாழ். மாநகர மேயரும் நேற்றிரவு விசாரணைக்காக யாழ்.பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டது எனச் சொல்லப்பட்டது. இந்நிலையிலேயே இன்று பிற்பகல் அவசரமாகக் கூடிய தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யாழ். மாநகர சபை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.