கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான செயலி அறிமுகம்.

கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இதன் அறிமுக நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி.அன்சார் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக். சுகாதார வைத்திய அதிகாரி அர்ஷாத் காரியப்பர் உட்பட வரி அறவீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த செயலியின் நோக்கம், பயன்பாடுகள் மற்றும் செயற்படுத்தும் முறைகள் தொடர்பாக அதன் வடிவமைப்பாளர் காமிஸ் கலீஸ் விளக்கமளித்தார்.

கல்முனை மாநகர சபைக்கு வரி செலுத்தும் பொது மக்கள், தாம் செலுத்திய வரிகள் மற்றும் நிலுவைத் தொகை உள்ளிட்ட விபரங்களை ஒன்லைன் மூலம் தமது கைத்தொலைபேசி ஊடாக அறிந்து கொள்வதற்கான செயலியொன்று ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது வீடுகளுக்கு வருகின்ற வரி அறவீட்டாளர்களிடம் வரிகளை செலுத்தும்போது அவர்கள் அவ்விடத்திலேயே இப்புதிய செயலி ஊடாக மாநகர சபை கணக்கில் வரவு வைக்கப்படுவதுடன் அத்தகவல் உரிய வரியிறுப்பாளரின் கைத்தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் உறுதி செய்யப்படும்.

பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் செலுத்தும் எந்தவொரு கட்டணம் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை பேணப்பட்டு, அவற்றில் மோசடி, முறைகேடுகள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்வதற்கும் அனைத்து விபரங்களையும் ஒரே பார்வையில் அறிந்து கொள்வதற்காகவும் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலின் பேரில் இச்செயலிகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Leave A Reply

Your email address will not be published.