உருமாறிய புதிய கொரணா வைரஸ் அறிகுறிகள் வீரியம் கூடியது.

கொரோனா வைரஸ் சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலில் பரவத் தொடங்கியது. அதன் பிறகு உலகம் முழுவதும் பரவியது.

ஆனால் முதலில் தோன்றிய வைரஸ் இன்று பல நூறு உருமாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு புதிய வீரியத்துடன் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இன்று கொரோனா 2-வது அலை ஏற்பட்டு இருப்பதற்கும் கூட உருமாறிய கொரோனா வைரஸ்தான் காரணம். பொதுவாக எந்த வகை வைரசாக இருந்தாலும் அது பரவிய இடங்களுக்கு தகுந்தாற்போல தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு தனது வீரியத்தை அதிகரித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் கொரோனா வைரசும் செயல்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் பல வகையில் தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு வலம் வருகிறது.

இந்தியாவில் கூட ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக உருமாறி இருக்கிறது.

இங்கிலாந்து, பிரேசில், ஆப்பிரிக்காவில் உருமாறிய சில கொரோனா வைரஸ்கள் மிக வீரியம் கொண்டதாக மாறி இருக்கின்றன. அவை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவி இருக்கிறது.

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவிலும் வீரியம் கொண்ட கொரோனா வைரஸ்கள் தனியாக உருவாகி இருக்கின்றன. இந்த வைரஸ்கள் ஏற்கனவே இருந்த வைரஸ்களை விட தொற்று திறன் அதிகம் கொண்டதாக உள்ளன. இதனால்தான் 2-வது அலை ஏற்பட்டு இருக்கிறது. முந்தைய வைரஸ் தாக்குதலின் போது சில அறிகுறிகள் தென்பட்டன.

குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், வாசனை அறியும் திறன் குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் இத்தகைய பொதுவான அறிகுறிகளை காட்டாமல் வேறுமாதிரியான அறிகுறிகள் காட்டுகின்றன.

சில வைரஸ்கள் உடலில் புகுந்தாலும் கூட எந்த அறிகுறியும் காட்டாமல் மவுனமாக உட்கார்ந்து இருக்கின்றன. உருமாற்ற வைரஸ்கள் என்னனென்ன அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்.

உருமாறிய வைரஸ்கள் வாய் பகுதிக்குள் எளிதாக தொற்றி விடுகின்றன. அவை பற்குழி, பல் இடுக்கு, நாக்கு பகுதி, தொண்டை ஆகியவற்றில் அமர்ந்து கொண்டு பல்கி பெருகுகின்றன.

அப்போது வாய் துர்நாற்றம், வாய்ப்புண், வாயின் மேல் தாடை பகுதியில் எரிச்சல், தொண்டை புண், நாக்கின் மேல் பரப்பில் வீக்கம், வெடிப்பு, நாவறட்சி, வாய் உலர்தல், எச்சில் உற்பத்தி குறைவு, வாய் அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன.

* உடல் சோர்வு, தலை சுற்றல், உடல் வலி.

* பலவீனமாக இருப்பது போன்ற தோற்றம், தடுமாற்றம், எப்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு.

* குமட்டல், உடல்நலம் குறைவு ஏற்பட்டு இருப்பதுபோன்ற ஒருவித உணர்வு, தசையில் ஒருவித வலி, உடல் வீக்கம், தசை எரிச்சல், மூட்டுவலி.

* திடீரென வயிற்றுப்போக்கு, சோம்பல்.

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது புதிய வைரஸ் தாக்கம் காரணமாக இருக்கலாம். எனவே பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த அறிகுறிகள் இருந்தாலே அவர்கள் அதிக ஓய்வு எடுக்க வேண்டும். கடினமான எந்த வேலைகளையும் செய்யக்கூடாது என்றும் நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.