திமுக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்

வரும் 7ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது.

இந்த சட்டசபை தேர்தலில் சமக, இஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இருப்பினும் மாநிலத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில் வானதி ஸ்ரீனிவாசனிடம் வீழ்ந்தார்.

இந்நிலையில், கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக கமல்ஹாசன் தனது ட்விட்டரில், “நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சராக பதவியேற்கிறீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என வாழ்த்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.