ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும். இரா.சாணக்கியன்.

பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் ஆடைத்தொழிற்சாலைக்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்தார்.

அங்கு நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்னர் கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘பலரின் வேண்டுகோளுக்கு அமைய இன்றைய தினம் மட்டக்களப்பில் இயங்கி வரும் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன்.

அங்கு சுமார் மூவாயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கொரோனா பயணத்தடை காலகட்டத்திலும் இவர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு ஆடைத்தொழிற்சாலையானது நமது உள்நாட்டு வருமானத்திலும் மற்றும் அனைத்து ஊழியர்களின் குடும்ப வாழ்வாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றது.

எனவே இவ்வாறு பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும். அதிகாரிகள் இதுகுறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.