உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விரைவில் வழக்குத் தாக்கல்! – மஹிந்தவிடம் புதிய சட்டமா அதிபர் உறுதி.

இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தார்.

சட்டமா அதிபர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்ஜய் ராஜரட்ணத்துக்குப் பிரதமர் இதன்போது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுக கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பிலும், தீ பரவலினால் சமுத்திர வள சுற்று சூழல் பாதிப்பு தொடர்பிலும் முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.

அதற்கான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த சட்டமா அதிபர், உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விசாரணை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும், குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் புதிய கட்டடத் தொகுதியை வழங்கியமை தொடர்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த சட்டமா அதிபர், பழைய சட்டமா அதிபர் திணைக்களக் கட்டடத் தொகுதி தொல்பொருள் பழமையைக் கொண்டுள்ளது. ஆகையால், அந்தக் கட்டடத் தொகுதியைப் புனரமைக்க அரசு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கொலை வழக்கு தொடர்பில் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் விசாரணைகளின்போது ஆரம்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அவ்வாறான தன்மை காணப்படாத காரணத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், இது குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடி உரிய தீர்வை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ச, சட்டமா அதிபர் திiணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, கனேஷ் தர்மவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.