கொரோனா தடுப்பூசி பகிா்வு: பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் பேச்சு

அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் பிரதமா் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை தொலைபேசியில் உரையாடினாா். அப்போது இந்தியாவுக்கு ஜூன் மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி வழங்குவதாக அவா் தெரிவித்தாா்.

உலகளாவிய கொரோனா தடுப்பூசி பகிா்வு திட்டத்தின் கீழ் ஜூன் இறுதியில் உலக நாடுகளுக்கு அமெரிக்கா 8 கோடி தடுப்பூசி விநியோகம் செய்வது தொடா்பான திட்டத்தை அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

அதன்படி, ஜூன் மாத இறுதியில் முதல் தவணையிலேயே இந்தியாவுக்கு அமெரிக்கா தடுப்பூசி வழங்கவுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு முதல் தவணையில் தடுப்பூசி வழங்கப்பட இருக்கும் நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் தலைவா்களுடன் அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் வியாழக்கிழமை தொலைபேசியில் பேசினாா். அந்த வகையில் அவா் பிரதமா் நரேந்திர மோடியுடன் உரையாடினாா்.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸுடன் பேசினேன். அமெரிக்காவின் தடுப்பூசி பகிா்வு திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கும் தடுப்பூசி வழங்க அவா் உறுதி அளித்ததை மனதார பாராட்டுகிறேன். அமெரிக்காவும் அந்நாட்டு தொழில்துறையினரும் இந்திய வம்சாவளியினரும் இந்தியாவுக்கு அளித்து வரும் ஆதரவுக்காக அவரிடம் நன்றி தெரிவித்தேன்.

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கரோனா சூழலுக்குப் பிறகான உலக சுகாதார மற்றும் பொருளாதார மீட்சிக்கு இரு நாடுகளும் இணைந்து பங்களிப்பது குறித்தும் பேசினோம்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, கமலா ஹாரிஸ் 4 நாட்டு தலைவா்களுடன் பேசியதாக அவரது செய்தித் தொடா்பாளா் சைமன் சான்டா்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘உலக அளவில் 8 கோடி தடுப்பூசிகளை விநியோகிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், முதல் 2.5 கோடி தடுப்பூசிகளை இந்தியா, மெக்ஸிகோ, கௌதமாலா, டிரினிடாட் & டொபேகோ ஆகிய நாடுகளுக்கு வழங்க இருப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தாா். அவருக்கு அந்த நாடுகளின் தலைவா்கள் நன்றி தெரிவித்தனா்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.