ஊரடங்கால் பறிபோன வேலை.. வாய்பேச, காதுகேட்க இயலாத பெற்றோர்: உணவின்றி தவித்துவருவதாக 9 வயது மகள் வெளியிட்ட ஆடியோ..!

காது கேட்க முடியாத, வாய்பேச இயலாத தாய், தந்தை இருவரும் வேலையில்லாமல், வருமானம் இல்லாததால், உண்ண உணவின்றி தவித்து வருவதாக 9 வயது சிறுமி வெளியிட்ட ஆடியோ மனதை.கரையவைப்பதாக உள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் மூங்கில் ஏரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது கவுஸ் (வயது-34) இவரது மனைவி பர்வின் (வயது-33) இவர்களுக்கு ஒன்பது வயதில் அலிமா என்ற மகளும், இரண்டு வயதில் அமிர் என்ற மகனும் உள்ளனர்.

முகமது கவுஸ் மற்றும் அவரது மனைவி பர்வீன் இருவரும் வாய் பேச முடியாமல் காது கேட்காமலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
முகமது கவுஸ் சென்னை விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஊரடங்கு போடப்பட்டதால் வேலை இன்றி வீட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை இல்லாததால் கையில் பணம் இல்லாமல் வீட்டு வாடகை மற்றும் உணவுப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் இருந்து வந்துள்ளனர். முகமது கவுஸின் மனைவி பர்வீன் பம்மல் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு போடப்பட்டு கடைகள் மூடப்பட்டதால் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளனர், கையில் பணம் இல்லாததால் அத்தியாவசிய பொருள் கூட வாங்க முடியாத சூழ்நிலையால் உண்ண உணவின்றி தவித்து வருவதாக கவுஸின் மகள் ஆடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

கஷ்டத்தை கூட வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும் தாய், தந்தைக்காக, அவர்களின் சார்பில் அவர்களுடைய குரலாக சிறுமி வெளிப்படுத்தியிருப்பது கல் நெஞ்சையும் கரைப்பதாக உள்ளது. பரிதவிப்பில் இருக்கும் இக்குடும்பத்தினர் உதவியை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.