மருத்துவக் கவனிப்பு இல்லை, விழிப்புணர்வு திட்டங்கள் இல்லை: கொரோனாவால் முழுவதும் கைவிடப்பட்ட பழங்குடி மக்கள்

போதுமான கொரோனா விழிப்புணர்வு இல்லாததாலும் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தாலும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாடு மூன்றாவது அலையின் எச்சரிக்கையுடன் கடுமையான இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடி வருகிறது. தற்போது நகர்ப்புறங்களைச் சேர்ந்த குடிமக்கள் படுக்கை மற்றும் மருத்துவ பற்றாக்குறையையும், பொருத்தமான சுகாதாரத்தைப் பெறுவதில் சிரமங்களையும் எதிர்கொண்டு வந்தாலும், கிராமப்புற இந்தியாவில் ஆதிவாசிகள் வளர்ந்த உள்கட்டமைப்பின் ரேடாரிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியதாவது, பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் 177 மாவட்டங்களில் 3 சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், பழங்குடிப் பகுதிகளில் இந்த நோய் பெரிய அளவில் வெடிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், நிலைமை கைமீறி போனால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறிதான் என்று ஆதிவாசி லைவ்ஸ் மேட்டரின் ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நிலம் மற்றும் வன உரிமைகளை ஆதரிக்கும் ஏக்தா பரிஷத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ் சர்மா கூறியதாவது, “பழங்குடிப் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், சுகாதார நிலை மற்றும் விழிப்புணர்வு மோசமாக இருக்கிறது என்று சொல்லமுடியாது. கிட்டத்தட்ட எங்குமே வழங்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இது எப்போதும் இந்தியாவில் பொதுவான போக்காகவே உள்ளது. இங்குள்ள மக்கள் கொரோனாவுக்கு முன்பே பிற நோய்களால் இறந்துவிட்டனர். ஆயினும்கூட, இது நம் அரசாங்கத்தை அசைக்கவில்லை. எனவே, அவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மறுபுறம், மாவட்ட மற்றும் துணை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போதுமான எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்டிருக்கவில்லை. இது பழங்குடி மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

தொலைதூரப் பகுதிகளில் அணுகல் இல்லாமை ஆதிவாசிகளைத் தேவையான சுகாதார பரிசோதனைகளுக்குச் செல்வதிலிருந்து நீண்ட காலமாக தனிமைப்படுத்தியுள்ளது வேதனைக்குரிய விஷயம் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நீண்ட தூர பயணமும் மற்றொரு கவலையாக இருக்கிறது. இது குறித்து, அகர்த்தலாவின் இளைஞர் ஒருங்கிணைப்பு அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் பிபூதி டெபார்மா கூறியதாவது, ” திரிபுரா மாவட்டங்களில் பரவியிருக்கும் ஜமாஷியா, கலோய், கைபெங், சக்மா, லுசாய், மராட் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு, அவசரகால சூழ்நிலை ஏற்படும் போது தலைநகர் அகர்தலாவில் உள்ள ஒரு மருத்துவமனையை அடைய மூன்று மணி நேரம் வரை எடுக்கலாம். திரிபுராவின் கடைசி பிரதேசத்திலிருந்து ஒரு மருத்துவமனை நகரத்திற்கு பயணிக்க ஐந்து மணிநேரம் வரை ஆகலாம் என்று கூறியுள்ளார்.

ஆதிவாசி லைவ்ஸ் மேட்டரில் ஒரு ஆர்வலர் எழுதிய தாரா என்ற பெண்ணின் கதை மூலம், இந்திய பழங்குடி மக்கள் மீது கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தின் தீவிரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கோட்டி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 28 வயதான கர்ப்பிணிப் பெண் தாரா சோர்தே சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் கொரோனா சோதனை எடுக்க 10 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.

பிஞ்ச்ரா கிராமத்தில் வசிக்கும் தாரா, நான்கு நிமிடங்களில் விரைவான ஆன்டிஜென் பற்றிய அறிக்கைகளைப் பெற்றார். ஆனால் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பியபோது, அவள் மற்றவர்களால் ஒதுக்கப்பட்டதை உணர்ந்தார். தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள அவர் தன் தாய் கிராமத்திற்குச் சென்றார். அவர் மனதில் ஒரே ஒரு கேள்விதான் எழுந்தது, “எனக்கு உண்மையில் கோவிட் -19 இருந்ததா? என் இடுப்பைச் சுற்றி எனக்கு வலி இருந்தது, அது கர்ப்பமாக இருக்கலாம். ” என்று அவர் கூறியுள்ளார். அவரின் விழிப்புணர்வின்மை மேலும் வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மை, பழங்குடியின மக்கள் அரசாங்க சுகாதார அமைப்பிலிருந்து விலகி இருக்க மற்றொரு காரணியாகும். ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளாக உணர்ந்த துரோகத்தால் அவர்கள் அரசாங்கத்தை நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. அப்பகுதி மக்களிடையே கடுமையான எண்ணிக்கையில் பாதிப்புகள் இருந்தாலும், அவர்கள் சிகிச்சை பெறுவதை விட தங்கள் நிலங்களில் இறக்க விரும்புகிறார்கள் என்று மற்றொரு ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கொரோனா வைரஸை அடுத்து இந்த பழங்குடி சமூகங்கள் எவ்வாறு நோயை எதிர்த்துப் போராடுகின்றன என்பது கேள்விக்குறிதான். நிபுணர்களின் கூற்றுப்படி, நகர்ப்புற இந்தியாவின் குடிமக்களை விட அவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது அவர்களின் உணவுப் பழக்கமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வும், மருத்துவ வசதிகளையும் அவர்களுக்கு வழங்குவது மிக அவசியம் என ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.