அடுத்த அமர்வில் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் : சஜித் அணியின் 15 பேர் ரணிலுடன் சங்கமிப்பர்

ரணிலுடன் சங்கமிப்பர்
சஜித் அணியின் 15 பேர்

அடுத்த அமர்வில் அவரே எதிர்க்கட்சித் தலைவர்;
நாடாளுமன்றில் மஹிந்தானந்த பரபரப்பு தகவல்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர். அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அவரே எதிர்க்கட்சித் தலைவர் என்பதை எதிரணியினர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

‘ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூடி சஜித் பிரேமதாஸவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற தீர்மானத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளனர். ஆனால், அதற்கு சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் ஆதரவளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளனர். அவர்களில் 10 பேர் ரணிலை ஆதரித்துக் கையொப்பமிட்டுள்ளனர். இதன்மூலம் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னும் ஒரு வாரகாலத்தில் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்கு வருவார். அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்க்கட்சித் தலைவர்.

இப்போதும் பிரபல ஹோட்டல் ஒன்றில் முக்கிய சிலர் ரணிலுடன் பேச்சு நடத்துகின்றனர் என அறிந்துகொண்டேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.