ஷேவ் பண்ணுங்க மோடிஜி.. 100 ரூபாய் அனுப்பிவைத்த டீக்கடை காரர்!

பிரதமர் நரேந்திர மோடி தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்து டீ கடை உரிமையாளர் ஒருவர் 100 ரூபாய் பணம் அனுப்பிவைத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பாராமதி பகுதியை சேர்ந்த அணில் மோர் என்ற டீ கடை உரிமையாளர் பிரதமர் நரேந்திர மோடி தாடியை ஷேவ் செய்துகொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்து 100 ரூபாயை மணி ஆர்டர் மூலம் அனுப்பிவைத்துள்ளார்.

இதுகுறித்து அணில் மோர் உள்ளூர் ஊடகங்களிடம் பேசியபோது, “பிரதமர் மோடி தனது தாடியை வளர்ந்துள்ளார். அவர் எதையாவது அதிகரிக்க வேண்டுமென நினைத்தால் மக்களுக்கு வேலைவாய்ப்புகளைத்தான் அதிகரிக்க வேண்டும்.

தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தி, மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். கொரோனா ஊரடங்குகளால் மக்கள் சந்திக்கும் இன்னல்களில் இருந்து வெளிவர பிரதமர் உதவ வேண்டும்.

பிரதமர் மோடி மீது எனக்கு மிக அதிக மரியாதை உண்டு. அவர் தாடியை ஷேவ் செய்ய வேண்டுமென்பதற்காக எனது சேமிப்பு பணத்தில் இருந்து 100 ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறேன். அவர் ஒரு மாபெரும் தலைவர். அவரை புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் குடும்பத்தினரை இழந்த மக்களுக்கும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு அணில் மோர் எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.