பீட்டா, டெல்டா இரண்டும் கலந்த கலவையாக காணப்படும் டெல்டா பிளஸ் வைரஸ்!

கொரோனா வைரசின் ‘டெல்ட்டா பிளஸ்’ உருமாற்றம் முதல் முறையாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. அதுகுறித்த அறிவிப்பு ஜூன் மாதம் வெளியானது. நேபாளத்துக்கு சென்று வந்த ஐந்து நபர்களிடம் இந்த உருமாறிய கொரோனா இருப்பது தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 வது அலையில் பரவலாக காணப்பட்ட டெல்டா உருமாற்றத்தில் மேலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு ‘டெல்டா ப்ளஸ்’ ஆகியுள்ளது. உலகில் கடந்த வாரம் வரையில், 11 நாடுகளை சேர்ந்த 197 பேரிடம் இந்த உருமாற்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இந்தியாவில் தற்போது 40 க்கும் மேற்பட்ட நபர்களிடம் டெல்டா பிளஸ் உருமாற்ற வைரஸ் அறியப்பட்டுள்ளது. அதில் மகாராஷ்ட்டிர மாநிலத்தில்தான் 20 க்கும் அதிகமான தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மே 23ம் தேதி கொரோனா தாக்கி இறந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாற்றம் பாதித்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. அவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. அவரை தவிர, டெல்டா பிளஸ் உருமாற்ற வைரஸ் அறியப்பட்ட மேலும் 4 பேர் நலமடைந்துள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

டெல்ட்டா பிளஸ் வகை உருமாற்றத்தின் மூன்று குணங்களை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1) வேகமாக பரவும் தன்மை
2) நுரையீரல் செல்களோடு ஒட்டிக்கொள்ளும் தன்மை அதிகம்
3) உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை குறைக்கும் தன்மை

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்ற கொரோனா வைரஸில் கூடுதலாக ஸ்பைக் புரோட்டினில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் டெல்டா பிளஸ் என குறிப்பிடுகின்றனர். இந்த ஸ்பைக் புரோட்டின் மாற்றம் தென் ஆப்பிரிக்காவில் காணப்பட்ட ‘பீட்டா’ உருமாற்றத்தில் இருந்த அம்சமாகும். பீட்டா மற்றும் டெல்ட்டா உருமாற்றம் இரண்டின் அம்சங்களும் டெல்டா பிளஸ் வகை உருமாற்றத்தில் உள்ளன. டெல்டா உருமாறிய கொரோனாவின் தன்மையான வேகமாக பரவுதல் அதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைத்தல், நுரையீரலில் அதிகம் ஒட்டிக் கொள்ளுதல் ஆகிய அம்சங்களும் இருப்பதால் இது கவலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்படும் தீவிர பாதிப்பிலிருந்து தடுப்பூசிகள் எவ்வாறு பாதுகாப்பு தரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து 1159 மாதிரிகள் மரபணு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு அதில் 772 மாதிரிகளின் முடிவுகள் கிடைத்துள்ளன. இதில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு டெல்ட்டா பிளஸ் வகை கொரோனா இருந்தது தெரியவந்துள்ளது. அந்த நபர் தற்போது குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.