கைகள் சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டிடப்பட்ட நிலையில் களனி ஆற்றில் சடலம்.

கைகள் சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டு இடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணால பிரதேசத்தில் களனி கங்கையில் மிதந்த நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் எம்புல்கம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தற்காலிகமாக வசித்து வந்த 54 வயது நபர் என, நவகமுவ பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஹல்தும்முல்ல பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குறித்த நபர், எம்புல்கம பிரதேசத்தில், பெண் ஒருவருடன் சுமார் ஒரு வருட காலமாக வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இவர், கடந்த ஜூன் 23ஆம் திகதி இரவு 10.00 மணியளவில், அவரது வீட்டிலிருந்து ஒரு சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அவரது சடலம் களனி கங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நவகமுவ மற்றும் ஹங்வெல்ல பொலிஸார் இணைந்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.