யாழ். மருதனார்மடத்தில் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அட்டகாசம்!

யாழ். மருதனார்மடம் சந்தைக்குப் பின்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ளது.

வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓட்டோ, சைக்கிள் என்பவற்றை அடித்துச் சேதப்படுத்திவிட்டு குறித்த கும்பல் தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் மாலை 5 மணியளவில் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்புக் கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களையும், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓட்டோ, சைக்கிள் என்பவற்றையும் அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டின் முன்பக்க தகர வேலியையும் அடித்துச் சாய்த்துள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டது எனப் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.