பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், இரண்டு போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இங்கிலாந்தின் பிர்மின்கம்மில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் கேப்டனான பாபர் அசாம் 158 ரன்களும், ரிஸ்வான் 74 ரன்களும், இமாம் உல் ஹக் 56 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 331 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக பிரைடன் கார்ஸே 5 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி 331 ரன்கள் குவித்துவிட்டதாலும், பல சீனியர் வீரர்கள் இங்கிலாந்து அணியில் இல்லாததாலும், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டேவிட் மாலன் (0), பென் ஸ்டோக்ஸ் (32) ஆகிய இரண்டு அனுபவ வீரர்களுமே ஏமாற்றம் கொடுத்த போதிலும் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேம்ஸ் வீன்ஸ் 102 ரன்களும், 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய லீவிஸ் 77 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 48வது ஓவரிலேயே இமாலய இலக்கை அசால்டாக எட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.