சந்திமால் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அவசர கடிதம்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், இலங்கையில் இதுவரை உருவாகிய சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களின் திறமையுடன் தனது திறமையை ஒப்பிடும் வகையிலான தரவுகளை சந்திமால் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்குாிய பூரண தகுதியை கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தமது திறமை தொடர்பில் கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தெரியப்படுத்தல் மற்றும் தமது கிரிக்கெட் பயணத்தின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு அக்குழுவுக்கு சந்தர்ப்பம் வழங்குதல் என்பனவே இக்கடிதத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தமது தார்மீக நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை என்றும், கடந்த கால கிரிக்கெட் வாழ்க்கையில் தனது தகுதிகள் சிறந்த நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அணியின் ஏனைய வீரர்களின் திறமையை மாத்திரம் கருத்திற்கொண்டதாகவும், அணியில் விளையாடிய காலப்பகுதியில் எடுத்த அனைத்து தீர்மானங்களையும், முதலில் அணி மற்றும் நாடு என்று சிந்தித்தே எடுத்ததாகவும் சந்திமால் தெரிவித்துள்ளார்.

தனக்கு விடுக்கப்படும் அழைப்பின் பிரகாரம் தான் எந்தவொரு தயக்கமும் இன்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடத்திலும் துடுப்பாடியுள்ளதாக சந்திமால் மேலும் தெரிவித்தார்.

31 வயது என்பது ஒரு வீரர் தனது திறமையை இழக்க வேண்டிய நேரம் அல்ல, மாறாக அதனைக் கூர்மைப்படுத்தும் நேரம். இந்த கடிதத்தின் மூலம், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளையும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்களையும் சந்திக்க வாய்ப்பு கோரியுள்ளதாக சந்திமால் தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தில், ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக, இந்த நேரத்தில் தமது எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து அந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டால், அதனை புறக்கணிக்காது உத்வேகத்துடன் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.