விக்கி அணியினருடன் செல்வம், சித்தர் சந்திப்பு : மாவை பங்கேற்கவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய இரு கட்சிகளின் தலைவர்களும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரும் யாழ்ப்பாணத்தில் இன்று நேரடிப் பேச்சில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், எஸ்.வினோநோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியின் ஓர் அங்கமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

எனினும், மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்த ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜாவுக்கு தொலைபேசி வழியாக அழைப்பு விடுத்திருந்தார். எனினும், அவர் பிறிதொரு நிகழ்வுக்காகக் கொழும்பில் தங்கியுள்ளார். அதனால் அவர் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் சார்பில் பிரதிநிதிகள் எவரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில், “எமது ஒற்றுமை முயற்சி பதவியை, தலைமையை நோக்கமாகக் கொண்டதல்ல. மக்கள் நலன் சார்ந்தது எனக் கூட்டத்தின் ஆரம்பத்தில் ரெலோ தரப்பால் கூறப்பட்டது. எனினும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் சார்பில் கலந்துகொண்ட அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கொஞ்சம் காட்டமாகக் கருத்து தெரிவித்தார்.

“ஏற்கனவே 10 கட்சிகள் ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்த் தேசிய பேரவை பற்றி நான் கருத்துத் தெரிவித்தது பிழை என்று தமிழரசுக் கட்சி குழப்பியது. ரெலோவும் அதை ஆதரித்து அறிக்கை வெளியிட்டது. அது பிழையென்றால், அது பற்றி கலந்துரையாடியிருக்கலாம். அதைவிட்டு, குழப்புவதைப் போல் நடந்து விட்டு, இப்போது புதிய கூட்டணி முயற்சிக்கு ஏன் வருகின்றீர்கள்?” என்று செல்வம் அடைக்கலநாதனிடம் கேள்வியெழுப்பினார் சுரேஷ்.

பழைய முயற்சிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்து அதனையே தொடரலாம் என்றும் சுரேஷ் குறிப்பிட்டார்.

எனினும், ஒற்றுமை முயற்சியின் அவசியத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஏனைய இரண்டு கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய கட்சி ஆகியன ஏற்றுக்கொண்டன. ஆனால், அது தொடர்பில் தொடர்ந்து பேச வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே “செல்வம் உங்கள் முயற்சி பெயிலியர்” என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

சந்திப்பின் இறுதியில் விக்னேஸ்வரன், “நாம் என்ன அடிப்படையில் சேர்ந்தியங்குவதென்பதை தீர்மானிக்க வேண்டும். தமிழ்த் தேசியப் பேரவையா, கூட்டணியா அல்லது வேறு வடிவமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எந்தப் பிரச்சினைகளில் சேர்ந்தியங்குவது என்பதையும் தீர்மானிக்க வேண்டும். அதற்காக முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பட்டியலிடுவோம். அதில் எதில் இணைந்து செயற்படுவது என்பதைத் தீர்மானிப்போம்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.