ஆடி மாத விரதங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.

ஆடி மாத விரதங்கள்!

தமிழ் வருடத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ணிய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி மாத விரதங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.

ஆடி செவ்வாய்;

ஆடி மாதம் வரும் 4 செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 4 நாட்களும் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே எண்ணைத் தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு குல தெய்வத்துக்கு வழிபாடு செய்து விட்டு அம்மனை வழிபட வேண்டும். ஆடி செவ்வாய் விரதம் துர்ககை, முருகனுக்குரிய விரதமாகும்.

முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை உள்ள காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது.பத்திரகாளி ராகுவாக அவதாரம் செய்தார் என்பர். நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜை செய்வது நன்மை ஆகும்.

ஆடி வெள்ளி;

ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தது.ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. கிழமைகளில் ‘சுக்ர வாரம்’ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை தான். ஆடி வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.அன்றைய தினம் அம்மனுக்கு விரதமிருந்து அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபட ஏற்ற நாளாகும்.

ஆடி கிருத்திகை;

ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்ததாகும். கிருத்திகைகளில் மிகவும் சிறப்புப் பெற்றது ஆடிக்கிருத்திகை.முருக பெருமானின் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது நலம். செவ்வாய் தோஷத்தால் திருமண தடைப்பட்டவர்களுக்கு பலன் கிடைக்கும்.

ஆடி பெருக்கு;

ஆடி மாதம் 18-ம் அன்று வரும் ஆடிப்பெருக்கு மிகவும் விஷேசமானது.அந்நாட்களில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் . காவிரி கரையோர கோவில்களில் புதுமணத் தம்பதியர் விரதமிருந்து ஆற்றில் குளித்து விட்டு வழிபாடு செய்வர்கள்.நீர் உள்ள குளங்களிலோ அல்லது போர்வெல் பகுதியிலோ அடிபெருக்கு கும்பிடலாம்.

ஆடி அமாவாசை;

ஆடி அமாவாசை மிகவும் சிறப்பானது. அமாவாசைகளில் சிறந்தது ஆடி அமாவாசை என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் புண்ணிய நதிகளில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்தல் சிறப்பாகும்.

Leave A Reply

Your email address will not be published.