தன்னை கடித்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவன்! அதிர்ந்து போய் நின்ற மருத்துவர்கள்

தமிழகத்தில் தன்னை கடித்த பாம்பை கண்டு அஞ்சாமல் அதை கையில் ஏந்தி கொண்டு மருத்துவமனைக்கு வந்த 7 வயது சிறுவனை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் தர்ஷித் (7). கடந்த 16ம் திகதி, வெள்ளைகேட் கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு சென்று, வயலில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது, தன்னை ஏதோ ஒன்று கடித்ததை உணர்ந்த சிறுவன் தர்ஷித், அதை பிடிக்க விரட்டிச் சென்றான். பிடித்த பிறகுதான், அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோரின் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு சென்றான். பாம்பு மற்றும் சிறுவனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வீட்டுக்கு அனுப்பினர்.

சிறுவனுக்கு பாம்பு கடித்த பிறகு ஏற்படும் எந்த மாற்றமும் உடலில் தெரியவில்லை என உறுதியான பின்னரே வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

மறுநாள், சிறுவனின் கால் வீக்கமடைந்து, உடல் நலம் மோசமடைய தொடங்கியது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் குழு தர்ஷித்துக்கு சிகிச்சை அளித்தது. தொடர்ந்து ஒரு வார காலம் கொடிய பாம்பு விஷம் முறிக்கும் சிகிச்சைக்கு பிறகு, தற்போது சிறுவன் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளான்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுவனிடம் நாங்கள், பாம்பை எதற்கு கையில் கொண்டு வந்தாய் என கேட்டோம். அதற்கு, நான் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும் என்று பதில் அளித்து எங்களை வியக்க வைத்தான் என கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.