இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி நடைபெற்றது.

இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினாலும், பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் 16 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத குல்தீப் யாதவ் 23 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு டிசில்வா 23* ரன்களும், மினோட் பனுகா 18 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 14.3 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி சார்பில் ராகுல் சாஹர் மட்டும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.