அச்சமற்ற எதிர்காலத்தை பெற்றுத் தாருங்கள் – சீருடை விவகாரத்தில் சிக்குப்பட்டோர் டக்ளஸிடம் கோரிக்கை.

யாழ். மாநகர சபையின் வரி மற்றும் தணடம் அறவீடு செய்வதற்காக அணி உருவாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையினால் அண்மையில் உருவாக்கப்பட்டு, சரச்சையை ஏற்படுத்திய வரி மற்றும் தணடம் அறவீடுகளுக்கான அணியுடன் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து உதவி கோரியிருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“யாழ். முதல்வர் மணிவண்ணனினால் வரி மற்றும் தண்டம் அறவீடு போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட குறித்த அணியுடன் சம்மந்தப்பட்ட ஐந்து இளைஞர்களும் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் எதிர்காலம் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறான செயற்பாடுகளின் போது, கடந்த கால அனுபவங்களையும் தற்போதைய சூழலையும் நிதானமாக ஆராய்ந்து செயற்பட வேண்டும். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதால் பலன் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் இதுதொடர்பாக கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கு கௌரவமான எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனினால் உருவாக்கப்பட்ட, வரி வசூலிப்பு மற்றும் வீதிகளில் குப்பை போடுவோர், உமிழ்நீர் துப்புவோருக்கு தண்டம் அறவிடுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அணியினருக்கு வழங்கப்பட்ட சீருடை, புலிகளின் காவல் துறையின் சீருடையை ஒத்தவகையில் இருந்தமை தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, யாழ். மாநகர முதல்வர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகளை தெளிவுபடுத்திய நிலையில் நீதிமன்றின் ஊடாக யாழ் முதல்வர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், குறித்த அணியின் உறுப்பினர்களாக உள்வாங்கப்படடிருந்த தங்களை பல்வேறு தரப்புக்களும் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைப்பதாகவும், தாங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருவது போன்று உணர்வதாகவும் தெரிவித்திருக்கும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள ஐவரும், தமக்கு கௌரவமான அச்ச சூழல் அற்ற எதிர்காலத்தினை உறுதிப்படுத்தி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.