கொரோனா கோரத்தாண்டவம்! குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குங்கள்!

கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டைக் குறைந்தது மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்தபட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால் கொரோனாத் தொற்று நோயாளர் தொகை அதிகரிப்பதுடன், வைத்தியசாலைகள் பராமரிப்புத் திறனை முற்றாக இழந்துவிடும் எனவும் 10 கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு தொடர்ந்தும் திறந்திருந்தால் நாட்டின் செயல் திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார செயற்பாட்டையும் மேம்படுத்த முடியும் எனவும் அரசின் 10 பங்காளிக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அத்துரலிய ரத்தன தேரர், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, எக்சத் மஹஜன பெரமுனவின் தலைவர் டிரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் வைத்தியர் ஜீ. வீரசிங்க, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன மற்றும் யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.