கைதடி முதியோர் இல்லத்தில் 48 முதியவர்களில் 41 பேருக்குக் கொரோனா!

யாழ். சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 41 பேர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நேற்று 98 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 28 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இவ்வாறு நேற்று அடையாளம் காணப்பட்ட 28 பேரையும் அவர்களது உடல்நிலையைக் கணித்து ஒரு பகுதியினரை வீடுகளில் பராமரிக்கவும், மற்றொரு பகுதியினரை கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் கண்காணிக்கவும் எனப் பரிந்துரைக்கப்பட்டனர்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் 48 முதியவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 41 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேவேளை, அங்கு கடமையாற்றும் 12 ஊழியர்களுக்கும் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்றாளர்கள் அனைவரையும் வட்டுக்கோட்டை மற்றும் கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப் பரிந்துரைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.