அரசு எடுத்த தவறான முடிவுகளால் வருமானத்தை இழந்துள்ளது நாடு : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

“அரசு எடுத்த தவறான முடிவுகளால் நாடு இன்று பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த அரசு ஆட்சிக்கு வந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதியின் வெற்றிக்குப் பின்னர் அரசு எடுத்த தவறான வரிக்குறைப்பின் முடிவின் விளைவாக நாடு வருவாயை இழந்துள்ளது. 12 சதவீத வரியை 8 சதவீதமாகக் குறைத்ததால் அரசு கிட்டத்தட்ட 6 இலட்சத்து 700 பில்லியன் ரூபாவை இழந்தது. இதன் விளைவாக, அரசுக்கு வருவாய் குறைந்துள்ளதால் ஈடுசெய்யும் முகமாக, அரசு 1,250 பில்லியன் ரூபாவைத் தற்போது அச்சிட்டுள்ளது.

இதன்விளைவாக, பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதோடு பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இன்று அந்நியச் செலாவணிக் கையிருப்பு கிட்டத்தட்ட 2.9 பில்லியன் ரூபாவாகக் குறைந்துள்ளது.

இன்று எந்த உலக நாடுகளும் அரசுக்கு நிதி உதவியை அல்லது கடன் தொகையை வழங்க ஒப்புக்கொள்வதாக இல்லை.

நமது பொருளாதாரப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனவே தவிர, அவற்றில் எதுவுமே குறைவதாக இல்லை. அதனைத் தீர்ப்பதற்கான முயற்சிகளையும் காணமுடியவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கொரோனா ஆரம்பம் முதலே இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன. அடுத்து, சில அரச சார்பு நண்பர்களுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்காகவும், அவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையுடன் சலுகைகளும் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. அரசுடன் இருந்தவர்களுக்கு இந்த வழியில் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது

இதனால் எதிர்பார்த்த டொலர் கையிருப்பு அதிகரிக்காமல் குறைவடைந்ததால், பல்வேறு விடயங்களைக் காலத்துக்குக் காலம் கொண்டு வந்தனர். உரங்களுக்கான இறக்குமதிக்குத் தடைவிதித்தனர். எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பெற்றோலியத்துறை அமைச்சர் கேட்டதாக அரசு கடந்த காலங்களில் பலமுறை கூறியுள்ளது. அது குறித்த மாறுபட்ட அனைத்துவிதமான கதைகளையும் அரசு உருவாக்கியது.

எண்ணெய் விலையை அதிகரித்தது ஜனாதிபதிதான். பெற்றோலியத்தைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.

டொலர்கள் பற்றாக்குறை பற்றி அவர் கூறவில்லை. டொலர்கள் பற்றாக்குறையின் கதையைப் பெற்றோலியத்துறை அமைச்சர் கூறினார்.

அரசால் இவற்றை ஈடுசெய்ய முடியாதபோது, ஜனாதிபதி பல்வேறு மாற்று விடயங்களைக் கூறினார். மஞ்சள் இறக்குமதி செய்வதை நிறுத்தியபோது, நம் நாட்டில் மஞ்சள் பயிரிடப்போவதாக கூறப்பட்டது. டொலர் பற்றாக்குறையுள்ளதாகச் சொல்லவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.