நாட்டை முழுமையாகத் திறக்கும் ஆரோக்கிய நிலைமை இல்லை! ஜனாதிபதியிடம் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டு.

“நாட்டை முழுமையாகத் திறக்கும் அளவுக்கு ஆரோக்கியமான மட்டத்தை நாம் இன்னமும் அடையவில்லை. இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாது நாட்டைத் திறந்தால், மிக மோசமான இன்னொரு கொரோனா வைரஸ் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசேட வைத்திய நிபுணர்கள் நேற்று கூட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பலவீனமான சுகாதாரக் கட்டமைப்பு காரணமாக நாட்டில் தென்னாபிரிக்க வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன எனவும் விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“நாடாக இன்னமும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபடவில்லை. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். ஒரு வாரத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்களும், ஆயிரம் அல்லது ஆயிரத்தையும் தாண்டிய வாராந்த கொரோனா மரணங்களும் இன்னும் நாட்டில் பதிவாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில். இது சாதாராண நிலைமை அல்ல. நாம் இப்போது கட்டுப்பாடுகள் இல்லாது செயற்பட முடியும் என்றோ அல்லது நாடு தற்போது எச்சரிக்கை மட்டத்தில் இருந்து விடுபட்டுள்ளது என்றோ எம்மால் ஒருபோதும் கூறிவிட முடியாது. நாம் இப்போதும் சிவப்பு எச்சரிக்கை மட்டத்திலேயே உள்ளோம்” எனவும் விசேட வைத்திய நிபுணர்கள், ஜனாதிபதியிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.